ராமர் கோவில் பூமி பூஜையை காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் - அறக்கட்டளை வேண்டுகோள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்தது. அதன்பின், அங்கு ராமர் கோவில் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.

ராமர் கோவில் கட்ட நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வரும் 5-ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் வெளியான அறிக்கையில், 1984-ம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்ட ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்களிடம் இருந்து பேராதரவு கிடைத்தது. தற்போது பூமி பூஜை நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் ஏற்படும் இயற்கையான விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், கொரோனா தொற்று பரவலால் தற்போது பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. அடிக்கல் நாட்டு விழா தொலைக்காட்சி மற்றும் இணைய தளத்தில் நேரலை செய்யப்படும். எனவே மக்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.