நேபாளம்: நேபாள சபாநாயகராக தேவ் ராஜ் கிமிரே முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது.
89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஷேர் பகதூர் தூபாவின் நேபாள காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தாவின் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி உள்பட 4 கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது.
ஆனால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு யார் பிரதமராக இருப்பது என்பதில் தூபாவுக்கும், பிரசந்தாவுக்கும் மோதல் ஏற்பட்டு கூட்டணி உடைந்தது. தொடர்ந்து பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். அந்த கூட்டணி பிரசந்தா தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டது.
அதனையடுத்து, அதிபர் பித்யாதேவி பண்டாரியை சந்தித்து ஆட்சி அமைக்க பிரசந்தா உரிமை கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட அதிபர் புதிய பிரதமராக பிரசந்தாவை நியமித்தார்.
இதன்பின், காத்மாண்டுவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த விழாவில்
நேபாளத்தின் பிரதமராக 3-வது முறையாக பிரசந்தா பதவியேற்றார். அவருக்கு
அதிபர் பித்யாதேவி பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
தொடர்ந்து
நேபாள நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்
நடைபெற்றது. இந்த போட்டியில் 2 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர்.
சி.பி.என்-யூ.எம்.எல். கட்சி வேட்பாளராக தேவ் ராஜ் கிமிரே மற்றும் நேபாள
காங்கிரசின் வேட்பாளராக ஈஷ்வரி நியூபனே ஆகியோர் போட்டியிட்டனர். அவர்கள்
இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதில்,
தேவ் ராஜ் கிமிரே முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு
மொத்தம் 167 ஆதரவு வாக்குகள் கிடைத்தன என்று தெரிய வந்துள்ளது. அவர்
நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும், மாகாணம் 1-ன் பொறுப்பு
தலைவராகவும் உள்ளார். அவருக்கு எதிராக குறைந்தது 100 வாக்குகள் பதிவாகி
இருக்கும். ஓர் உறுப்பினர் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது.
275 பேர்
கொண்ட கீழவையில் 138 வாக்குகள் வெற்றி பெறுவதற்கு அவசியம். சபாநாயகராக
கிமிரே தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை பழம்பெரும் நாடாளுமன்றவாதியான பசுபதி
ஷம்ஷேர் ராணா அவையில் அறிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து துணை
சபாநாயகருக்கான தேர்தல் நாளை 21-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.