தடுப்பணைகள் அமைக்க உத்தரவிட தாக்கலான பொதுநல மனு தள்ளுபடி

மதுரை: அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொண்டதுபோல் ஆகிவிடும்... திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க உத்தரவிட தாக்கலான பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'இத்தகைய பொதுநல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்தால் அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொண்டதுபோல் ஆகிவிடும்,' என கருத்தை பதிவிட்டது.

ஸ்ரீரங்கம் உத்தமர்சீலி விஜயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:காவிரி, கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்புவில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கின்றன. இடையில் முக்கொம்பு முதல் கல்லணைவரை தீவு பகுதியாக உள்ளது. கம்பரசன்பேட்டை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ளது.

உத்தமர்சீலியிலிருந்து காவிரியின் குறுக்கே வேங்கூருக்கும், கிளிக்கூடுவிலிருந்து கொள்ளிடம் குறுக்கே இடையாற்றுமங்கலத்திற்கும் தடுப்பணைகள் அமைத்தால் விவசாயம், குடிநீருக்கு உதவும். நீர்வளத்துறை, பொதுப்பணி துறைக்கு மனு அனுப்பினோம். தடுப்பணைகள் அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு விஜயகுமார் மனு செய்தார்.

இதை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா அமர்வு விசாரித்தது. இதில் தமிழக அரசுத் தரப்பில் கிளிக்கூடு காவிரியின் இடது கரை, கொள்ளிடத்தின் வலது கரைக்கு இடைப்பட்ட பகுதியில் கல்லணைக்கு மேல்புறம் அமைந்துள்ளது. கல்லணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் கிளிக்கூடு மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள கிணறுகள் செறிவூட்டப்படும்.

நாட்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. இடையாற்றுமங்கலம் கொள்ளிடத்தின் இடது கரையில் அமைந்துள்ளது. இதன் வழியாக அய்யன் வாய்க்கால் செல்வதால் பாசன வசதி பெறுகிறது. தடுப்பணைகள் அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என நீர்வளத்துறை பொறியாளர் தெரிவித்துள்ளார் என தெரிவித்தது.

தொடர்ந்து நீதிபதிகள் தெரிவித்ததாவது: தடுப்பணைகள் அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என பொறியாளர் அறிக்கை அளித்துள்ளார். இதில் நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் இருப்பதாக கருத முடியாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. இத்தகைய பொதுநல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்தால் அரசின் நிர்வாக அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொண்டதுபோல் ஆகிவிடும். மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.