எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் அதிருப்தி: சபாநாயகர் வெளியேறினார்

புதுடில்லி: மக்களவைக்கு வரபோவதில்லை... அவையின் கண்ணியத்துக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் வரை தாம் மக்களவைக்கு வரப்போவதில்லை என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் அமளியால் தொடர்ந்து 10-வது நாளாக மக்களவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி அவையில் இருந்து சபாநாயகர் ஓம் பிர்லா வெளியேறினார். மாநிலங்களவையில் மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி அவையில் விளக்கமளிக்குமாறு அவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

அதற்கு, பிரதமரை அவைக்கு வருமாறு தம்மால் அறிவுறுத்த முடியாது என மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர் தெரிவித்தார்.

இதனிடையே, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசு மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.