சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை: டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி பலி ..தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பருவமழை காலம் தொடங்கியுள்ளதால் அதன் வீரியம் உயர்ந்துள்ளது. சென்னையில் 5 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


திருப்பத்தூர் அருகே சிவராஜ்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறும்மிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதியில் டெங்கு பரவலை தடுக்க வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா என அந்த பகுதி முழுவதும் ஆய்வு நடத்தவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.