தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது


சென்னை :தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ....தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். எனவே இதன் காரணமாக நீண்ட நாட்களாகவே பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அங்கு மார்புசளி, இடைவிடாத இருமலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பெறும் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளதாவது, “காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவரது உடல்நிலை சீராகவுள்ளது.

அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளன. இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்புக்குப் பின்னர் விரைவில் வீடு திரும்புவார். அதன்பின் தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அதில் தெரிவித்து உள்ளது.