நீட் தேர்வு .. மதுரையில் திமுக வருகிற 24ல் உண்ணாவிரதம்

சென்னை: நீட் தோ்வை தடை செய்யாத மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதம் மதுரையில் மட்டும் நடைபெறவில்லை. மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால், அங்கு மட்டும் உண்ணாவிரத போராட்டம் வேறொரு நாளில் நடத்தப்படும் என்று திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திமுக உண்ணாவிரதம் வருகிற 24-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யபட்டு உள்ளது. பழங்காநத்தம் ரவுண்டானா அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு இடையில் மதுரையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்று விடுத்து உள்ளார்.