தி.மு.க. தேர்தல் களத்திற்கு வராமல் இருப்பதே நல்லது- அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொங்கல் பரிசு ஆரம்ப கட்ட அறிவிப்புதான், இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். இது குறித்து தூத்துக்குடியில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, தற்போது 2,500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் உள்ளனர். இது ஆரம்பகட்ட அறிவிப்புதான், இன்னும் ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் பல்வேறு திட்ட அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடப்படும். எனவே மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கின்ற அ.தி.மு.க. அரசே மீண்டும் தமிழகத்தில் வெற்றி பெறும். ஆகையால் தி.மு.க. தேர்தல் களத்திற்கு வராமல் இருப்பதே நல்லது.

அனைத்து குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலிப்பார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.100 வழங்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசினை ரூ.1,000-மாக உயர்த்தி வழங்கினார்.

தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் அதனை ரூ.2,500-ஆக பெருந்தன்மையுடன் உயர்த்தி வழங்கி உள்ளார். இதில் அரசியல் சாயம் பூசுவது அவரவர் விருப்பம். நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தடம் பதிக்க போவதில்லை. அவர் சம்பந்தம் இல்லாமல் பேசி வருகிறார். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் உண்மையாகி விடும் என்று நினைக்கிறார். கமல்ஹாசன் மட்டுமல்ல, அ.தி.மு.க. அரசின் மீது யார் குறை கூறினாலும் அதற்கு கட்சி தொண்டர்கள் தக்க பதில் அளிப்பார்கள் என அவர் கூறினார்.