இலங்கை காவல்துறை பயன்பாட்டிற்காக ஜப்பான் வழங்கிய நன்கொடை

கொழும்பு: ஜப்பான் வழங்கிய நன்கொடை... இலங்கை காவல்துறை திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பானிய அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வான்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை அதிபர் செயலகத்தில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டது. இந்த உபகரணங்களை வழங்குவது தொடர்பான ஆவணங்களை ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டேக்கி ஷுன்சுகே அதிபரிடம் கையளித்தார்.

இந்த வாகனங்களை பரிசோதித்ததைத் தொடர்ந்து, ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்கஅமைச்சருடன் அதிபர் சுமுக உரையாடலில் ஈடுபட்டார். காவல்துறையின் விசாரணை நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இந்த உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஷுகோஷி ஹிடேகி மற்றும் ஜப்பானிய தூதுக்குழுவினர், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, அதிபரின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.