உத்தரபிரதேசத்தில் குழந்தைகளுடன் பேருந்தில் பயணித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்கரில் இருந்து கவுதம் புத்தா நகருக்கு, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார். பேருந்தின் கடைசி படுக்கையில் படுத்து தூங்கி அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது அந்த பஸ்ஸில் இருந்த டிரைவர்களில் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர், வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் பெரும் பதற்றம் அடைந்துள்ளார். பின்னர் அவர் பேருந்து கவுதம் புத்தா நகரை அடைந்ததும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த பெண் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த டிரைவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்துவரும் தன் கணவரை பார்ப்பதற்காக அந்த பெண் சென்றபோது, இரவு நேரத்தில் மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, கடைசி படுக்கையில் இருந்த பெண்ணை டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும், லக்னோ-மதுரா இடையே இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.