கனமழை நீடிப்பதால் குற்றாலத்தில் குளிக்க 2ம் நாளாக நீடிக்கும் தடை

நெல்லை: இரண்டாம் நாளாக நீடிக்கும் தடை... நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர் பகுதிகளில் நேற்று மழை குறைந்தாலும் புறநகர் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக கல்லிடைக்குறிச்சி அருகே ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டும் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத் தடை விதித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பக பிரியா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் களக்காடு புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது.


வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு உள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நேற்று காலை முதலே களக்காடு தலையணையிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் குளிக்க நேற்று முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


தடுப்பணை பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கி விடாமல் இருக்க கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.