ஊட்டி மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!

தமிழகத்தில் 11-வது புதிய மருத்துவ கல்லூரி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டப்பட உள்ள நிலையில் இன்று காணொலி காட்சி மூலம் ஊட்டி மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் 11-வது புதிய மருத்துவ கல்லூரி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டப்பட உள்ளது.

மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதம், தமிழக அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டிட பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு, இன்று காணொலி காட்சி மூலம் ஊட்டியில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.447½ கோடியில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.