அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு ... ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்திருந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. அதாவது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும், பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. எனவே இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதனை அடுத்து இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் இதே வழக்கு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ''எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே எந்த வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் ஆஜராகி தங்களது வாதங்களை எடுத்து வைக்க இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் இந்த வழக்கில் நீதிபதிகள் விரிவான பதில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.