இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்ட குழு இன்று தமிழகம் வருகை - கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

2021-ம் ஆண்டு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. தற்போது கொரோனா காலமாக உள்ளதால் அதற்கேற்ப கூடுதலாக வாக்குச்சாவடிகளை உருவாக்குவது பற்றியும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது 2 கட்டமாக நடத்துவதா? என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது. இதற்காக பொதுத்தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்பட 5 மாநிலத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க உள்ளனர்.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வருகிறது. துணை தேர்தல் கமி‌ஷனர்கள் சுதீப்ஜெயின், ஆசிஸ்குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் கமி‌ஷன் செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விமான நிலையம் சென்று வரவேற்கிறார்.

பின்னர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் பகல் 12 மணியளவில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் கொடுக்கும் மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார்கள். அதன்பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளுட னும் ஆலோசனை நடை பெறுகிறது.

இந்த கூட்டம் முடிந்ததும் நாளை தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர், உளவுப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூற உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.