பாறைகள் சரிந்து விழுவதால் மலை கிராமத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்

சுவிட்சர்லாந்த்: மலை கிராமத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்... சுவிட்சர்லாந்தில் பாறைகள் சரிந்து விழும் அபாயத்தால் அழகிய மலை கிராமம் ஒன்றில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

அந்நாட்டில் ஆல்ப்ஸ் மலைத் தொடர் சாரலில் உள்ள ப்ரியன்ஸ் என்ற கிராமத்தில், பாறைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. மலையின் உச்சியில் இருந்து திரளான பாறைகள் அவ்வப்போது உருண்டு விழுவதால் வீடுகள் சேதமடைகின்றன. கால்நடைகள் கொல்லப்படுகின்றன.

பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால் பனி மூட்டம் அடர்ந்த அந்த மலை கிராமத்தில் வசிக்கும் சுமார் 100 பேரை காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவர்களும் ஆசையாக கட்டிய வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் அவ்வப்போது கடந்து செல்லும் பகுதி என்பதால் பாறைச் சரிவு குறித்து 5 மொழிகளில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.