துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் வருகையால் பரபரப்பு

அதிமுக தலைமையகத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் திடீர் வருகை பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் செயற்குழு கூட்ட ஏற்பாடுகளுக்காக வந்ததாக தெரிய வந்தது.

அதிமுகவில் சமீபத்தில் அமைச்சர்கள் கருத்து, முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சையால் தொண்டர்கள் மத்தியிில் கலக்கம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நடந்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ராமநாதபுரம் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி சென்ற நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செம்மலையுடன் நேற்று மாலை திடீரென அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். அவரது வருகையால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் செயற்குழு கூட்ட முன்னேற்பாடுகள் மற்றும் கட்சியில் இருந்து வழங்கப்படும் கல்வி நிதி மற்றும் குடும்ப நிதி குறித்து முடிவெடுப்பதற்காக அவர்கள் வந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து தொண்டர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டது.