இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனுதவி திருப்பி செலுத்தும் கால அவகாசம் நீட்டிப்பு

இலங்கை: அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்தியாவால் சுமார் 4 பில்லியன் டொலர் அவசர உதவி வழங்கப்பட்டிருந்தது.

இந்த கடன் உதவியின் ஒரு பகுதியான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்திய அரசாங்கம் நீடித்துள்ளது.

இதேவேளை இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.