பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு... 49 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

சென்னை: அபராதம் விதிப்பு... கூடுதல் கட்டணம் வசூல் செய்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதமாக விதிக்கப்பட்டது.

பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து புகார்கள் வரும்போது எல்லாம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்படும். ஆனால், இது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். மேலும் பலர் வெளியூர்களில் இருந்து இன்று (டிச.26) சென்னை திரும்பினர்.

இந்த இரண்டு நாட்டுகளில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்திய போக்குவரத்துறை அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 49 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.92,500 அபராதமாக விதித்தனர். அதிக கட்டணம் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.