தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 19-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மளிகை கடைகள், மருந்தகங்கள், காய்கறிபழ கடைகள், பால் விற்பனை நிலையங்கள் பிற்பகல் வரை செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோர் மற்றும் உரிய அனுமதிச்சீட்டு (பாஸ்) பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் எந்தவித தளர்வுகளும் இல்லாத தீவிரமான முழு ஊரடங்கு கடந்த 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தளர்வு இல்லா தீவிர முழு ஊரடங்கு இன்று மீண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கிலும் அனுமதிக்கப்பட்டிருந்த அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்படுகிறது. மளிகை கடைகளும், காய்கறிபழக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகிறது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசமான இடங்கள் மட்டுமே செயல்படும்.
தீவிர முழு ஊரடங்கையொட்டி, தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்க சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்கள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வேண்டிய பொருட்களை வாங்கி சென்றனர்.
அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோர், உரிய ஆவணங்களுடன் செல்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். விதிமுறைகள் மீறி பயணம் செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், சமரசமின்றி அவர்களது வாகனங்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.