தனது புதிய மருமகளுக்கு 101 வகை உணவு வகைகளுடன் விருந்து வைத்து அசத்திய மாமியார்

101 வகை உணவுகளுடன் விருந்து... வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு, 101 வகையான உணவுகளுடன் மாமியார் விருந்தளித்து வரவேற்றது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மூன்றுமாவடியை சேர்ந்த அஹிலா - அபுல்கலாம் தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கு, கடந்த 9ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கால் மணமக்கள் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு செல்ல முடியாததால், வீட்டு வந்த மருமகளுக்கு மாமியார் அஹிலா தானே விருந்தளிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக பிரியாணி, பிரைட் ரைஸ், சப்பாத்தி, புரோட்டா, மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, ஆம்லேட், சூப்புகள், பழ ஜூஸ்கள், அப்பளம் என 101 வகையான உணவுகளை சமைத்து பரிமாறிய மாமியார், தானே மருமகளுக்கு ஊட்டியும் விட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திராவில் மருமகனுக்கு 67 வகையான உணவுகளை விருந்தளித்த மாமியாரின் வீடியோ வைரலான நிலையில், மதுரையை சேர்ந்த மாமியார் ஒருவர் மருமகளுக்கு வழங்கிய இந்த பிரமாண்ட விருந்து அனைவரையும் வியக்கவைத்துள்ளது. இதுகுறித்து அறிந்த பலரும் மாமியார் அஹிலாவை பாராட்டி வருகின்றனர்.