டெல்லி எல்லைப்பகுதிகளில் 30வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறைக்கு பாதகமாக அமைந்திருப்பதாக கூறும் விவசாயிகள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.

விவசாயிகள் டெல்லியை இணைக்கும் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் இந்த போராட்டம் இன்று 30-வது நாளை எட்டி உள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், விவசாயிகள் தரப்பில் இதுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அர்த்தமற்ற திருத்தங்களை மீண்டும் கொண்டு வரக்கூடாது என்றும், ஆக்கப்பூர்வமான உறுதியான திட்டங்களை எழுத்துப்பூர்வமாக கொண்டு வரவேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.