ஆடம்பர வாழ்க்கைக்காக மூன்று மாத குழந்தையை விற்ற தந்தை...பெங்களூரில் பரபரப்பு

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக மூன்று மாத குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு தந்தையே விற்ற சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதியருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தையை விரும்பாத தந்தை, பிறந்தவுடனே அந்த குழந்தையை விற்பனை செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்ததை அறிந்த நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு 3 மாத குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். உடனே அவர் மகிழ்ச்சியுடன் குழந்தையை விற்றுவிட்டார். குழந்தையை விற்றதால் கிடைத்த பணத்தில் நவீன செல்போனும், புதிய பைக்கும் வாங்கியுள்ளதாகவும், இதற்கு அவரது மனைவியும் உடந்தை என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென குழந்தையை காணாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பெற்றோரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து அதிரடியாக குழந்தை மீட்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தையின் தந்தை தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.