காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி 2 குழந்தைகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி

மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி 2 குழந்தைகளுடன் இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழனி நகர காவல் நிலையத்தில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி உசேன் என்பவர் 2 குழந்தைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி. காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் உயிர்தப்பினார்.

பழனியை அடுத்த நெய்க்கரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உசைன் (37). இவரது மனைவி தஸ்லீமா. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். உசேனின் மனைவி தஸ்லீமா கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக நெய்க்காரபட்டி காவல் நிலையத்தில் உசேன் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் காவலர்கள் உசேனின் புகாரை அலட்சியம் செய்ததால் மனமுடைந்தவர் பழனி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பு தனது இரண்டு குழந்தைகளின் உடலிலும், தனது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் உசேன் மற்றும் குழந்தைகளை மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் பழனி நகர காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த பழனி டிஎஸ்பி சிவா, உசேனை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தினார். இச்சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.