சமூக இடைவெளியின்றி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் அச்சம்

அரசு பஸ்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.

சேலத்திலிருந்து ஆத்தூர் வழிதடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 24 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பொது முடக்கம், ஜூன் 1 முதல் தளர்வு செய்யப்பட்டு பரவலாக அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால், சேலம்-ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிரமமும். சிக்கலும் நீடித்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை சேலத்திலிருந்து ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பயணிகள் படியில் அமர்ந்தபடியும், நின்றுகொண்டும் பயணித்தனர்.

தொற்று நோய் பரவி வரும் தருணத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பயணிகள் பேருந்தில் பயணித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சமூக இடைவெளியோடு பயணிகளை அழைத்துச்செல்ல அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.