மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

சென்னை: தெற்கு வங்க கடல் பகுதியில் புதிய மோக்கா புயல் உருவாக இருப்பதால் கடலில் பலத்த காற்ற வீசக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அதையடுத்து நாளை முதல் 11-ம் தேதி வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும், அப்போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இதனால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டு உள்ளது.

எனவே மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீனவர்களின் படகுகள், மீன்பிடி கலன்கள், வலைகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்கவும் மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.