ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: 1100 சிறப்பு பஸ்கள்... தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதையொட்டி பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை என வரும் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கும், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு புதன்கிழமை முதல் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதே போல் அக்டோபர் 2ஆம் தேதி திங்கட்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்வோர் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும்படியும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.