முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி, திருவாரூரில் டிரோன்கள் பறக்க தடை

திருச்சி: திருவாரூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை ... திருவாரூரில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். எனவே அதற்காக இன்று இரவு விமானம் மூலம் திருச்சி வருகிறாா். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சா்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் சென்று அங்கு இரவு ஓய்வெடுக்கிறார்.

அதன் பின்னர் நாளை திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். செவ்வாய்க்கிழமை திருவாரூர் காட்டூரில் 7,000 சதுர அடியில் ₹12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு தலைமையேற்க உள்ளார்.

இதையடுத்து இந்த விழாவில் பிகாா் முதல்வர் நிதிஷ்குமாா் கலந்து கொண்டு கலைஞா் கோட்டத்தைத் திறந்து வைக்கிறாா். முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி, திருவாரூா் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாலை மார்க்கமாக முதல்வர் பயணம் மேற்கொள்வதால், திருச்சி மாவட்டத்திலிருந்து அவர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி இன்று டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்திருக்கிறார். அதேபோன்று 2 நாட்கள் அவர் திருவாரூரில் தங்க உள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்தை முன்னிட்டு திருவாரூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்து உள்ளார்.