பொழுது போக்கிற்காக ஓ.பி.எஸ். போராட்டம் நடத்துகிறார்: முன்னாள் அமைச்சர் விமர்சனம்

சென்னை: பொழுது போக்கிற்காக கொடநாடு விவகாரத்தை, கையில் எடுத்து ஓபிஎஸ் போராட்டம் நடத்துகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஊழலை சுட்டிக்காட்ட அதிமுக தவறியதில்லை. ஊழலைச் சுட்டிக்காட்டும் கடமையை நாங்களும் செய்கிறோம், அண்ணாமலையும் அப்படித்தான்.

ஊழலுக்கு எதிராக அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வது, அவரது கட்சியை வளர்க்க செல்கிறார். அண்ணாமலை அவரது கடமையை செய்கிறார். பொழுது போக்கிற்காக கோடநாடு விவகாரத்தை, கையில் எடுத்து ஓபிஎஸ் போராட்டம் நடத்துகிறார்.

ஓ.பி.எஸ்-டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி. அச்சாணி இல்லாத வண்டியை டிடிவி தினகரன் ஓட்டுகிறார்; அது ஓடாது. ஊழலை பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு தற்போதும் கூடுதல் தொகை வசூலிக்கின்றனர்.

காவல்துறையினர் திருடர்களை பிடிப்பதற்கு பதில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர். தினமும் ரூ.25 கோடி வசூலிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.