பாஜவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

புதுடில்லி: பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.


பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் (80), உட்கட்சி மோதல் காரணமாக காங்கிரசில் இருந்து விலகினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்று பெயரில் தனிக்கட்சி தொடங்கி அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

ஆனால் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தனது சொந்த தொகுதியான பாட்டியாலாவில் அமரிந்தர் சிங் தோல்வியடைந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார். அதன்பின்னர் அவர் முறைப்படி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அத்துடன் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். அமரீந்தர் சிங்குடன் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேர், முன்னாள் எம்.பி. ஒருவர் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.