பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட யோசனை கூறிய மத்திய அரசுக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை இழப்புகள், தொழில், வர்த்தக இழப்புகளால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது. இந்நிலையில் நலிவுற்றுள்ள பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட வேண்டும் என ப.சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 50 சதவீத குடும்பங்களின் கைகளில் பணத்தை கொடுங்கள் எனவும், ஜி.எஸ்.டி. அமல்படுத்தியபோது, அளித்த வாக்குறுதியின்படி மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து குடும்பங்களுக்கும் உணவு தானியங்களை வழங்குங்கள். தேவைப்படுவோர் அவற்றை பெற்றுக்கொள்வார்கள். உணவு தானிய கையிருப்பை பயன்படுத்தி கூலியை வழங்குங்கள். பாரம்பரியமான பொதுப்பணிகளை தொடருங்கள். கடன் வழங்க ஏதுவாக வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குங்கள். மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப் பீட்டு தொகையை வழங்குங்கள் என்று யோசனை கூறியுள்ளார்.

மேலும் அவர், எம்.ஆர்.பி.எம். என்னும் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்ட விதிமுறைகளை தளர்த்துங்கள். இந்த ஆண்டு கூடுதல் கடன் வாங்குங்கள். முதலீடு செய்வதை துரிதப்படுத்துங்கள். சர்வதேச நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவற்றின் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் சலுகையை பயன்படுத்துங்கள். கடைசி முயற்சியாக பற்றாக்குறையின் ஒரு பகுதியை பணமாக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.