ரஜினியின் அரசியல் வருகையை விமர்சனம் செய்த முன்னாள் நீதிபதி

தமிழர்கள் அறிவார்ந்த மக்களாக இருந்தாலும் திரைப்பட மோகத்தில் இருக்கும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் அரசியல் குறித்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்த நிலையில் அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், சமூக நல ஆர்வலர்களும், அரசியல் விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்தனர். ஒரு சிலர் ரஜினியின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே ரஜினிகாந்தை பலமுறை கடுமையாக விமர்சனம் செய்துள்ள முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினியின் அரசியல் வருகையை குறித்து கூறியதாவது:-

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரா? அவருக்கு மக்களின் தேவை குறித்து என்ன தெரியும்? மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு, உணவு, சுகாதாரம், கல்வி போன்றவற்றை வழங்க அவருக்கு தெரியாது. தமிழர்கள் மிகவும் அறிவார்ந்த மக்கள். ஆனால் அவர்கள் திரைப்பட நட்சத்திரங்களின் மீதான மோகத்தில் முட்டாள்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார். முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய் கட்ஜூவின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.