மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து; முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை இருந்தவர் மனோகரன் (வயது 66). தி.மு.க.வை சேர்ந்த இவர் நேற்று மதுரை செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி அவரது ஊரான கொட்டக்குடி பகுதியை சேர்ந்த தையாபுதீன்(42) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தார்.

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் படமாத்தூர் அருகே வந்தபோது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரி, மனோகரன் உள்ளிட்ட 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மனோகரன் மற்றும் அவரது நண்பர் தையாபுதீன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், தையாபுதீன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் ஜம்சித் (32) காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுதொடர்பாக பூவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜம்சித்தை கைது செய்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் விபத்தில் பலியான தகவல் அறிந்ததும் சிவகங்கை பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் மருத்துவமனைக்கு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.