முன்னாள் எம்.பி., நடராஜா ரவிராஜ் சிலை வளாகம் சேதம்; போலீசார் விசாரணை

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் பூந்தொட்டிகள், பூச்சாடிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

யாழ். சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு, சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டு உள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.