பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் தாய் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், பனாமா கேட் ஊழல் வழக்கு காரணமாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவரை தகுதி நீக்கம் செய்தது. அதன்பின், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்புக்கு சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் அவர் சிகிச்சை பெறுவதாக கூறி தொடர்ந்து லண்டனிலேயே தங்கியுள்ளார்.

ஊழல் விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பாகிஸ்தான் கோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் நவாஸ் ஷெரீப் அதனைப் புறக்கணித்து வருகிறார். இதனால், பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவாஸ் ஷெரீப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதன்பின், நவாஸ் ஷெரீபின் தாய் பேகம் ஷமிம் அக்தர் கடந்த பிப்ரவரி மாதம் லண்டன் சென்று மகனுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீபின் தாய் பேகம் ஷமிம் அக்தர் லண்டனில் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் லாகூர் கொண்டு வரப்பட்டு அவர்களது வீட்டில் கணவர் மியான் ஷெரீப் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட உள்ளது. நவாஸ் ஷெரீபின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் சிறையில் உள்ளதால், தாயின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க பரோல் கேட்டுள்ளனர். நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப வாய்ப்பில்லை என்பதால், லண்டனில் இறுதிச்சடங்குகளை நடத்தியதாக கூறப்படுகிறது.