சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது தடை விதிக்க வர்த்தகர்கள் வலியுறுத்தல்

வர்த்தகர்கள் கோரிக்கை... லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களை கொன்ற சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் அங்கிருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்கள் மீதும் தடை விதிக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் இருந்து வருடந்தோறும் சுமார் 5 லட்சத்து 62 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்புக்கு (74 பில்லியன் டாலர்) பொருட்கள் இறக்குமதியாகின்றன.

இதில் விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோக சாதனங்கள்,மொபைல் போன், மின்னணு சாதனங்கள், அழகு பொருட்கள் உள்ளிட்ட சில்லரை வர்த்தக பொருட்கள் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு (17 பில்லியன் டாலர்) இறக்குமதி நடக்கிறது.

இந்த இறக்குமதியையும், ஆன்லைன் வாயிலாக நடக்கும் சீனப் பொருள்களின் வியாபாரத்தையும் உடனே தடை செய்ய வேண்டும் என அகில இந்திய வியாபார மண்டல் கூட்டமைப்பு, அகில இந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பும் ஆகியன வலியுறுத்தி உள்ளன.