முழு நேரமாக வந்தா பணி, இல்லைன்னா... ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

நியூயார்க்: கடும் உத்தரவிட்ட எலான் மஸ்க்... உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான டெஸ்லா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க், தனது நிறுவன ஊழியர்கள் முழுநேரமாக அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் விலகிவிட வேண்டும் எனவும் கடும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தொலைவிலிருந்து வேலை செய்வது இனிமேல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் எலான் மஸ்க் (Elon Musk)தெரிவித்துள்ளார். மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla) நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன.

இது தொடர்பாக டுவிட்டரில் எலான் மஸ்கிடம் (Elon Musk) வினவப்பட்டபோது, புதிய விதிகளுக்கு கட்டுப்பட விரும்பாதவர்கள், வேலை செய்வது போன்று வேறு எங்கேயாவது பாசாங்கு செய்யலாம்’ என அவர் கடுப்பாக பதிலளித்துள்ளார்.

அதேசமயம் ‘டெஸ்லாவில் ஒவ்வொருவரும் வாராந்தம் குறைந்தபட்சம் 40 மணி;த்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும். நீங்கள் வேலைக்கு வராவிட்டால், ராஜினாமா செய்துவிட்டதாக கருதப்படுவீர்கள்’ என அதிகாரிகளுக்கு எலான் மஸ்க் (Elon Musk) அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அலுவலகம் என்பது நிறுவனத்தின் பிரதான அலுவலகங்கள் எனவும், கடமையுடன் தொடர்பற்ற கிளை அலுவலகங்கள் அல்ல எனவும் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.

அதோடு இப்படி கேட்காத நிறுவனங்கள் உள்ளமை உண்மைதான். ஆனால், அவர்கள் இறுதியாக எப்போது சிறந்த தயாரிப்பு ஒன்றை ஏற்றுமதி செய்தார்கள்? மிக உற்சாகமான, அர்த்தமுள்ள பொருட்களை டெஸ்லா தயாரித்துள்ளது. எதிர்காலத்திலும் தயாரிக்கும். தொலைபேசி மூலம் இது நடைபெறமாட்டாது’ எனவும் எலான் மஸ்க் (Elon Musk) கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உங்கள் சிரேஷ்டத்துவம் அதிகரிக்க அதிகரிக்க, உங்கள் பிரசன்னம் அதிகமாக வெளிப்பட வேண்டும் என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் ஊழியர்களை தொடர்ந்தும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு பல நிறுவனங்கள் திணறுகின்றன.
அதேவேளை எலான் மஸ்க் (Elon Musk), வேலை விடயத்தில் கண்டிப்பானவர் என்பதுடன் அவர் விடுமுறை பெறுவது அரிதிலும் அரிது. இவ்வாறான நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்லா நிறுவனம் நெருக்கடியில் இருந்தபோது, டெஸ்லா தொழிற்சாலை தரையிலேயே எலான் மஸ்க் (Elon Musk) உறங்கியமை குறிப்பிடத்தக்கது.