துபாயில் இருந்து தங்கம் கடத்தல்... சிறப்பு விமானத்தில் வந்த 3 பேர் கைது

துபாயில் இருந்து உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்த 3 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. இங்கு துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தன. இந்த விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வருவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பேரும், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் என 3 பயணிகள் மீது சந்தேகம் கொண்டு அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களது உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 880 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.