ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி விபத்து; மூதாட்டி பலி

அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கமணி. இவருடைய மனைவி மலர்கொடி(வயது68). சம்பவத்தன்று தங்கமணி தனது மனைவி மலர்க்கொடியை ஸ்கூட்டரில் ஏற்றி கொண்டு திருவாரூருக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குசென்று கொண்டிருந்தார்.

கொரடாச்சேரி வெள்ளமதகு என்ற இடம் அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் மலர்க்கொடி படுகாயம் அடைந்தார். தங்கமணிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார், பஸ் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் கேசவபுரத்தைச் சேர்ந்த மோரீஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..