அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே அரசு பேருந்துகளை இயக்க முடிவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் நள்ளிரவு முதல் வருகிற 30-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதேபோல் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக மண்டலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து முறையை ரத்து செய்ய இன்றைய கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே அரசு பேருந்துகளை இயக்கவும், கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லையை மூடவும் அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.