உயர்தர சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் வழங்குகின்றன- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இந்த இரண்டாயிரம் மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். உரையின் போது அவர் கூறியதாவது:- நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

மருத்துவத் துறையில் தொடர்ந்து தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பதினொன்று அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி சாதனை படைத்துள்ளோம். மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்ததன் மூலம் 5,300 பேர் மருத்துவம் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ரூ.120 கோடியில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் தனியார் மருத்துவமனைகளைவிட உயர்தர சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன என முதலமைச்சர் தெரிவித்தார்.