மெரினா கடற்கரை பயன்பாடு குறித்து தமிழக அரசு தகவல்

தமிழக அரசு தகவல்... மெரினா கடற்கரையின் ஒரு பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு விட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மீனவ நல அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவின் ஒரு பகுதியாக, மெரினா கடற்கரை பராமரிப்பது மற்றும் தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்துவது குறித்து விசாரிக்கப்பட்டது. மேலும், கொரோனா ஊரடங்கு சமயத்தில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா..? எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “இதுவரைக்கு மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், தற்போது, ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், பொதுமக்களை அனுமதிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் அக்.,5க்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், மெரினாவில் இருந்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக மாற்று கடைகளை வைக்க உரிமம் வழங்கும் டெண்டர் பணிகள் பற்றியும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.