கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த அரசு அனுமதி

தமிழகத்தில் வருகிற 16ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் படி, தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பல கோயில்களில் உழவாரப் பணிகள் நிறைவுபெற்ற பிறகும், அரசு அனுமதி வழங்காத காரணத்தால் குடமுழுக்கு விழா நடத்தப்படாமல் இருந்தது.

இதனை தொடர்ந்து கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்குமாறு அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 16 ஆம் தேதி முதல் கோயில்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குடமுழுக்கு விழா நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் குடமுழுக்கு விழாக்களில் 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.