தேசபக்தி நம்முடைய எண்ணங்களை நிரப்பட்டும்; தமிழக கவர்னர் சுதந்திர தின வாழ்த்து

74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

74-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்கள் ஆரோக்கியமான உடல் நலத்தையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் பெறவேண்டும் என்று என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பல நாடுகளுக்கு மத்தியில், நமது நாடு பெருமையோடு முன்னோக்கி பீடு நடைபோடுகிறது.

நமது நாடு சுயசார்புடையது. அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி, ஆழ்ந்த கலாசாரம் மற்றும் சமூக ஒத்திசைவுக்காக அனைத்து நாடுகளாலும் நமது நாடு மதிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நம்முடைய நாட்டின் சுதந்திரத்திற்கான உன்னத காரணத்துக்காக, தியாகம் செய்த துணிச்சலான ஆன்மாக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். நமது நாட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையில் அழைத்துச்சென்றவர்களுக்கு நாம் நன்றியை தெரிவிப்போம்.

தேசபக்தி நம்முடைய எண்ணங்களை நிரப்புவதோடு, நம்முடைய நாட்டு மக்கள் மீதான அக்கறையும் இதயங்களில் ஆதிக்கம் செலுத்தட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.