ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்

சென்னை: நாளை டெல்லி பயணம் .... தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பிற்பகலில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் மீண்டும் அவர் சென்னை திரும்புவார் என தெரிகிறது. குடியரசு தலைவரை டி.ஆர்.பாலு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பிரநிதிகள் குழு சந்தித்த நிலையில் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு,கூடுதலாக சில வார்த்தைகளாக சேர்த்து ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தார்.


எனவே இதற்கு திமுக கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இதையடுத்து ஆளுநருக்கு எதிராக பேரவையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை நடந்திடாத இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இப்பரபரப்பான சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லிக்குச் செல்கிறார். இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசனத்தை மீறி செயல்படுவதாக, தமிழக எம்.பிக்கள் குழு இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்த நிலையில், ஆளுநர் டெல்லி செல்வது என்பது குறிப்பிடத்தக்கது.