ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியில் கவர்னர் தமிழிசை ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு அருகே உள்ள ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியை தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார்.

ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி பாடம் நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவையும் வழங்கினார். தொடர்ந்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளார். பெண்கள் பொது வாழ்வில் நுழைய இது உதவும். இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும்போது, புதுவையில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இடம் பெறுவார்கள்.

அடிப்படையில் எனக்கு வரும் கோப்புகள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் கவர்னர் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில விஷயங்களை தெரிவித்து வருகிறேன். .அதற்காக ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற கடுமையாக முயற்சி செய்துள்ளோம்.

அதற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு மாணவர்கள் கடிதமும் எழுதியுள்ளனர். தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் விளையாட்டு, கலை, கலாசாரம் போன்றவற்றில் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், மற்ற குழந்தைகளை எல்லா வகையிலும் ஊக்குவித்து ஆதரவளிக்கவும் பொதுப் போட்டிகளில் பங்கேற்க உதவும் நோக்கத்துடன் இந்தத் திட்டத்தைத் தொடங்குகிறோம்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளிகள் சாமானிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே எனது அடிப்படை விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.