அரசு- வேம்பு மரத்திற்கு திருமணம்... பத்திரிகை அடித்து அறுசுவை உணவு வழங்கிய மக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவிலில் அரசமரம் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டியவாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் தானாக வளர்ந்தது.

இதை காலை, மாலை என இரு வேளைகளிலும் கிராம மக்கள் அதனை வழிபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நோயின்றி வாழவும், உலக நன்மைக்காகவும், அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு எடுத்து அழைப்பிதழ் அச்சடித்தனர்.

இதனையடுத்து மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்புநாயகி என்றும் குறிப்பிட்டு அழைப்பிதழை வீடு வீடாக சென்று விநியோகம் செய்துள்ளனர். அதன்படி இரு மரங்களுக்கும் மாலை அணிவித்து, புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத மேளதாளங்களுடன் வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த வினோத திருமணத்திற்கு வந்த கிராம மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் செம ஹைலைட் விஷயம்.