படிப்படியாக உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அவ்வப்போது பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெய்து வந்த மழை குறிப்பாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தீவிரமடைந்தது.

இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 551 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நீர்மட்டம் கடந்த ஒரு வார காலமாக படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அணைக்கு நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் நீர்மட்டம் 105.92 அடியாக இருந்தது. நேற்று 106.24 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 106.38 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 517 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்காக வினாடிககு 1,300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.