திருச்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் இன்று திருச்சிக்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.

முதல் நாள் நிகழ்வாக நாளை (25-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறை வாரியாக ஆய்வு செய்கிறார்.

2-வது நாள் 26-ந் தேதி ( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந் தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

அவருக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.