தேசிய விளையாட்டு தினத்தையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய விளையாட்டு தினமான இன்று விளையாட்டு வீரர் - வீராங்கனையர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் பேச - எழுத கற்றுக் கொள்ளும் முன்பே விளையாடத் தொடங்குகிறோம்.

எனவே அதனை முறைப்படுத்தி வளர்த்தெடுத்தால் சாதிக்கும் வீரர்களை உருவாக்க முடியும். மேலும், உடலையும் உள்ளத்தையும் சீராக்க தொடர்ந்து விளையாடுவது எல்லோருக்கும் அவசியம். இதனை உணர்ந்தே விளையாட்டுத் துறைக்கு தனி அமைச்சகத்தை நம் முத்தமிழ் அறிஞர் அவர்கள் தொடங்கினார்கள்.

இதனை அடுத்து பன்னாட்டு போட்டிகள் - தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை - சர்வதேச விளையாட்டு நகரம் என்று இன்னும் ஏராளமான திட்டங்களை தீட்டி நம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவற்றை வளர்த்தெடுத்து கொண்டு வருகிறார்கள்.

எனவே முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டை இந்திய துணைக் கண்டத்தின் விளையாட்டுத் தலைநகராக்க நாள்தோறும் உழைத்து வருகிறோம். விளையாட்டிலும் நம்பர் 1 என்ற இலக்கை நோக்கி பயணிக்க #National_Sports_Day வில் உறுதியேற்போம் என அவர் அதில் குறிப்பிட்டு உள்ளார்.