தானும், தனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிக்கிறோம் - ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றபின், இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவு நல்ல முறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பராக விளங்கி வருகிறார். மேலும் ஜனாதிபதி டிரம்ப்பின் குடும்பத்தினரும் இந்தியாவுடன் நல்ல நட்பு பாராட்டி வருகின்றனர்.

டிரம்ப் பதவியேற்றபின், அவரது குடும்பத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் நபர் அவரது மகள் இவாங்கா டிரம்ப் ஆவார். இந்தியாவின் விவகாரங்கள் குறித்து இவாங்கா டிரம்ப் டுவிட்டரில் கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் அவருக்கு இந்தியாவில் ஒரு நட்சத்திர அந்தஸ்து ஏற்பட்டுள்ளது.

தற்போது தானும், தனது மகளும், மகனும் இந்தியாவை அதிகம் நேசிப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். எனது மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர், மகள் இவாங்கா டிரம்ப், எனது ஆலோசகர் கிம்பர்லி ஆகியோர் சிறந்த இளைஞர்கள். அவர்கள் இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்கள் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்தியாவுடனான நட்புறவு குறித்த கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், அவர்கள் இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்கள். நானும் அவ்வாறே செய்கிறேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் அதிகம் நேசிக்கிறேன். நான் எப்போதும் இந்தியாவின் சிறந்த நண்பனாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.